கேரளா லாட்டரி டிக்கெட் விற்ற 7 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, துடியலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் ,பாலக்காடு மெயின் ரோடு சேர்ந்தவர் கோபாலசாமி ( வயது 67) இவர் அங்குள்ள பொன்னாயூர் பஸ் ஸ்டாப் அருகே வைத்து தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தாராம். இவரை பொள்ளாச்சி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கைது செய்தார். இவரிடமிருந்து 46 கேரளா லாட்டரி டிக்கெட்களும், லாட்டரி சீட்டு விற்ற ரூ.2, 150 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல பொள்ளாச்சி வெள்ளே கவுண்டனூரை சேர்ந்தவர் பரமசிவம் என்ற மூக்குப்பொடியன் ( வயது 46 )இவர் நல்லூர் ஊத்துக்குளி பிரிவு அருகே லாட்டரி டிக்கெட் விற்றாராம் .இவரை பொள்ளாச்சி தாலுகா போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 48 லாட்டரி டிக்கெட் பணம் ரூ ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல ஆனைமலை மாரப்ப கவுண்டன் புதூர் அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக பெரிய போது காமராஜர் வீதியைச் சேர்ந்த ஐயப்பன் ( வயது 65 )கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 13 லாட்டரி சீட்டுகளும் பணம் ரூ 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனைமலையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோர் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக ஆனைமலை கீரைக்காரர் வீதியைச் சேர்ந்த அழகர்சாமி ( வயது 73 )கைது செய்யப்பட்டார் .லாட்டரி டிக்கெட், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  தடாகம் திருவள்ளுவர் நகர், குண்டு பெருமாள் கோவில் அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக இடையர்பாளையம் காந்தி நகரை சேர்ந்த மதன் ( வயது 29 )கைது செய்யப்பட்டார். இதே போல பன்னிமடை காமராஜர் சிலை அருகே கேரளா லாட்டரி டிக்கெட் விற்றதாக பாப்பநாயக்கன்பாளையம் திருமுருகன் நகரைச் சேர்ந்த ஹான்ஸ்ராஜ் (வயது 60) கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக கஞ்சப்பட்டி கந்தசாமி காலனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 63) கைது செய்யப்பட்டார்.இவர்கள் 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..