ஆம்னி பேருந்துகளில் 30% கட்டணம் குறைப்பு.!!

ஒவ்வொரு பண்டிகை விடுமுறை தினங்களிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் பொதுமக்களிடம் பயண கட்டணமாக கொள்ளையடிக்கும் செயலை சொல்லி மாளாது.

இதற்கு டீசல் விலை உயர்வு என்று என்ன காரணம் சொன்னாலும், பல ஊர்களை விட, சென்னையில் இது பெரும் கொள்ளை தான். வழக்கம் போல, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் பல வருடங்களாக உத்தரவு வந்தாலும், இரவு நேரங்களில் டிக்கெட் கிடைக்காமல் குடும்பத்தோடு பேருந்து நிலையத்தில் நிற்கையில், அவர்கள் சொல்வது தான் டிக்கெட் விலையாக இருக்கும்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கு நல்ல செய்தியாக ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணம் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த குறைக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். (அவங்க எங்க டிக்கெட்ல ரேட் போட்டு தர்றாங்க?) திருநெல்வேலி, தென்காசி என தொலைத்தூரத்திற்கு பயணம் செய்பவர்கள் விசேஷ விடுமுறை தினங்களில் பேருந்து கட்டணம் ரூ.5,000 வரையில் கூட்ட நெரிசலைப் பொறுத்து ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். “சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும், மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.