கோவையில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்திய 3 பெண்கள் கைது

திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சிலர் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதை அடுத்து கோவை ரயில் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்பொழுது 3 பெண்கள் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்து காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி, போத்தனூரைச் சேர்ந்த மேரி என்பது தெரியவந்தது. இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்ததும். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று மூன்று பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..