மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை-3 கல்லூரி மாணவர்கள் கைது..!

மதுரையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை தற்பொழுது கொடிகட்டி பறக்கிறது இதனால் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாகவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்வதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலில் மதுரை ஜம்பு ரோபுறம் மார்க்கெட் பகுதியில் உள்ள மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக பிற மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கஞ்சா பொட்டலம் விற்பனை செய்து வந்ததை கண்டறிந்து விசாரணையை தீவிர படுத்தினர் போலீசார்.

விசாரணையின் முடிவில் இன்ஸ்டாகிராம் வழியாக தங்கள் இருப்பிடத்தை லொகேஷன் மூலம் அனுப்பி அந்த இடங்களுக்கு மாணவர்களை வரவைத்து சிறிய பொட்டலங்களாக 50 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிஷோர், மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.