சிறுவாணி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள்… கேரள அரசை தடுத்து நிறுத்த கோவை மக்கள் கோரிக்கை..!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
தமிழக – கேரள எல்லையில் அமைந்து உள்ள இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. இரு மாநில ஒப்பந்தப்படி, கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கு தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை கேரள அரசு தர வேண்டும். ஆனால், பருவ மழை சமயத்தில், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேக்காது, கூடுதல் தண்ணீரை கேரள பொதுப் பணித் துறையினர் ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர். தற்போது மழை இல்லாததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம், 7 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக நேற்று, 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் பில்லுார் அணை கைகொடுத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், கேரள மாநிலம், அட்டப்பாடி வழியாக, பவானி ஆறாக பில்லுார் அணைக்கு வருகிறது.
இச்சூழலில், பவானிக்கு செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது கோவை மக்களிடம் அச்சத்தையும், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே குளிக்கடவு – சித்துார் வழித் தடத்தில் உள்ள நெல்லிப்பதி எனும் இடத்தில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தவிர, ஆற்றில் மேலும் இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டவும் கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. கேரள அரசின் இந்நடவடிக்கைகளால், கோவை மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும். எனவே, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, கோவையில் உள்ள அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் கண்டன குரலை எழுப்பி வருகின்றன. தமிழக அரசு தாமதப்படுத்தாமல், கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.