2-ம் கட்டமாக ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… ஜூலை 15 முதல் செப்.15 வரை 12,525 கிராமங்களில் 2,500 சிறப்பு முகாம்கள்.!!

சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ம் கட்டமாக தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ஜூலை 15 முதல் செப்.15 வரை 2,500 மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, உள்ளாட்சிஅமைப்புகளின் வார்டு மற்றும்கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளைப் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் 5 மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர்ப் பகுதிகளில் 265 முகாம்கள் என ஒரு வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன.

இம்முகாம்களில் 2.64 லட்சம் மனுக்கள், பிற சேவைகள் மூலம் பெறப்பட்ட 6.40 லட்சம் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. 30 நாட்களுக்குள் 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு, பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சிறப்பு முகாம்களை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஜூலை 15 முதல் செப்.15-ம் தேதி வரை இந்த முகாம்கள் நடத்தப்படும். இதில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-க்குள் தீர்வு காணும் நோக்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, கூட்டுறவு, உணவுத் துறை, எரிசக்தித் துறை, உள் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தொழிலாளர் நலத் துறை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூக சீர்திருத்தத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வீட்டுவசதித் துறை, சுகாதாரத் துறை, வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறை ஆகிய 15 துறைகளைச் சேர்ந்த மனுக்கள் பெறப்படும்.

மொத்தம் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 2,500 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 5 ஊராட்சிகளை இணைத்து 20 ஆயிரம் மக்களுக்கு ஒரு சிறப்பு முகாம் வீதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களும் முதல்வரின் முகவரி என்னும் வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.

அனைத்து சிறப்பு முகாம்களிலும் ஒரு பிரத்யேக இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு, பதிவேற்றப்படும் மனுக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஒப்புகை அனுப்பப்படும். இந்த முகாம்கள் நடைபெறுவது குறித்து குறும்படம் தயார் செய்யப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரைமூலம் விளம்பரங்கள் செய்யப்படும்.

எனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..