பிரேசிலில் கொட்டி தீர்த்த கனமழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் பலி..

பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, நகரில் 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வடக்கு சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள இரண்டு நகரங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மழை வெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும் பெர்டியோகா நகரங்க;ல் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் உள்ளன, மேலும் மீட்புக்குழுக்கள் இங்கு தொடர்ந்து தேடி வருகின்றனர். நிலச்சரிவுகளால் 50 வீடுகள் இடிந்துள்ளதாகவும், இதில் காணாமல் போன மக்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் சாவோ செபஸ்டியாவோ நகர மேயர் ஃபெலிப் அகஸ்டோ தெரிவித்தார்.

ஒரே நாளில் இங்கு 600 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது குறுகிய கால அதிக மழைப்பொழிவாகும், மேலும் இந்த வெள்ளத்தில் நிறைய வீடுகளின் மேற்கூரை மட்டும் தெரியும்படி நீரில் மூழ்கியுள்ளன. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து பார்வையிடுவதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.