காதல் திருமணம் செய்த 21 நாளில் புதுப் பெண் மர்ம மரணம்.!!

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். எனவே அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை – சிறுவாணி சாலை மத்வராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் பேரூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும், அதே வகுப்பில் படித்து வந்த செல்வபுரத்தை சேர்ந்த ரமணி (20) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் கடந்த 8 – ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள். உடனே தனது மகளை காணவில்லை என்று ரமணியின் பெற்றோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ரமணியை தேடி வந்தனர். இதற்கிடையே ரமணி – சஞ்சய் ஆகியோர் வேளாங்கண்ணி சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி செல்வபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் 2 பேரும் செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.

அப்போது இருவரின் பெற்றோர் மற்றும் புதுமண தம்பதியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் நான் காதல் கணவருடன் தான் செல்வேன் என்று ரமணி உறுதியாக கூறினார். அவர்களை சஞ்சயின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ரமணியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே காதல் தம்பதியை சஞ்சயின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து காதல் தம்பதி மத்வராயபுரத்துக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு கடந்த 24 – ந் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்கிடையே ரமணியின் தந்தை, தனது மகளை தொடர்பு கொண்டு உனது பொருள் வீட்டில் இருக்கிறது, வந்து எடுத்துச் செல் என்று கூறி உள்ளார். அதற்கு நான் பிறகு வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று ரமணி கூறியதாக தெரிகிறது. இதனால் அவரை தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டதால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தொலை தொடர்பு கல்வி மூலம் படிக்க முடிவு செய்து விண்ணப்பங்களை வாங்க கோவை வந்தனர். பின்னர் அவர்கள் பிற்பகலில் வீடு திரும்பினார்கள்.

அப்போது உடல் சோர்வாக இருப்பதாக கூறி ரமணி படுக்கை அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார். இரவில் சாப்பிட எழுப்புவதற்காக சஞ்சய் சென்று பார்த்த போது ரமணி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரமணியை மீட்டு பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ரமணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்து கொண்ட 21 நாளிலேயே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் இது குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ரமணி உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள், உயிரிழந்த ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதால், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் எதையும் உறுதியாக கூற முடியும். எனவே சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.