கோவையில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பரிதாப பலி..

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை ஆனைகட்டி பகுதியில் ஏராளமாண காட்டுயானைகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவார பகுதியில் உள்ள மாங்கரை , தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் கோவை துடியலூர் அருகே உள்ள மாங்கரைப் பகுதியில் காட்டு யானை ஒன்று நேற்று இரவு சுற்றி திரிந்தது. பின்னர் அது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது .அந்த பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ் குமார் ( வயது 38) இவர் கோவையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் சிறுநீர் கழிப்பதற்காக இரவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவர் அங்கு யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விடாமல் யானை துரத்திச் சென்று தாக்கியது .இதில் மகேஷ் குமார் அலறியபடி கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு மனைவி திவ்யா, தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது வீட்டு அருகே காட்டு யானை தாக்கி மகேஷ் குமார் மயங்கி கிடந்தார் . அவருக்கு அருகில் யானையும் நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு யானை அங்கிருந்து சென்றது .உடனே அவரது மனைவியும் தந்தையும் சென்று பார்த்தனர். அங்கு யானை தாக்கியதில் மகேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தடாகம் போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இது தொடர்பாக ஆனைகட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

இதே போல கோவை மாவட்டம் ஆனைகட்டி பக்கம் உள்ள துவைப்பதிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாச்சலம் ,கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலையில் வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளிவந்தார் .அப்போது அங்கு மறைந்திருந்த காட்டுயானை திடீரென்று வெளியே வந்தது. அதை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் காட்டுயானைவிடாமல் துரத்தி சென்று தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். ஒரே நாளில் நேற்று வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.