தமிழக மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் சிறை பிடிப்பு – இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்.!!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து சிறை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ எங்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததால் கைது செய்தோம்; சுட்டுக் கொலை செய்தோம்; தாக்குதல் நடத்தினோம் என்கிற கொலைப் பல்லவியை 40 ஆண்டுகளாக பாடி வருகிறது.

தமிழ்நாடு அரசும், மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரையிலான இலங்கை அரசுடனான பேச்சுகளில் மீனவர்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறதே தவிர, கைது- சிறைபிடிப்புகள் முடிவுக்கு வந்தது இல்லை.

இந்நிலையில் வங்க கடலில் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 19 மீனவர்களும் தமிழ்நாட்டின் எந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறை பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.