கீழடி 9ம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு.!!

சிவகங்கை : கீழடியில் நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழாய்வில், இதுவரை183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி ஏப்ரல் மாதம் வைத்தார்.

இந்த அகழாய்வில் இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் தங்க ஆபரணம், கண் மை தீட்டும் அழகு சாதன குச்சி, செப்பு கம்பி, காளை உருவ சுடுமண் பொம்மை, வட்ட சில்லுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடியில் நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழாய்வில், இதுவரை183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் 4 குழிகளில் 3 – 6 செமீ தடிமண் உள்ள ஒழுங்கற்ற தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.மேலும் குத்தகை தளத்தில் தோண்டப்பட்ட 4 குழிகளில் 17 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…