15 வயது மகன்: தாய் மீது காவல் நிலையத்தில் புகார்

கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா அரோரா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 15 வயதான இவர்களது மகன், பிரியா அரோராவின் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதை பிரியா அரோகரா கண்டித்ததுடன் மகனை அடிக்கவும் செய்துள்ளார். இது தொடர்பாக 15 வயது மகன் தனது தந்தை தீபக் அரோராவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபக் அரோரா பாஜகவில் இருக்கும் தனது நண்பர்கள் சிலரை அழைத்து கொண்டு பிரியா அரோரா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது பிரியா அரோராவிற்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இதில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாஜகவை சேர்ந்தவர்கள், வீட்டில் இருந்த பிரியா அரோராவையும் அவரது வீட்டில் இருப்பவர்களையும் மிரட்டி விட்டு 15 வயது சிறுவனை அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது

இதனிடையே 15 வயது சிறுவன் தன்னை தன் தாயாரும், அவருடன் இருந்தவர்களும் அடித்தது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறுவனின் தாயார் பிரியா அரோரா மற்றும் அவரது வீட்டில் இருக்கும் மாசிலாமணி, சூர்யா ஆகிய மூன்று பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.