1,458 டன் யூரியா ரயில் மூலம் கோவைக்கு வருகை- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்..!

கோவை: சென்னையில் இருந்து ரயில் மூலம் 1,458 டன் யூரியா கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் ராபி பருவத்தில் மக்காச்சோளம், பயறுவகை பயிர்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவத்திற்கு தேவையான அனைத்து வகையான உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி யூரியா – 1,272 டன், டிஏபி – 952 டன், பொட்டாஷ் – 1,742 டன், காம்ப்ளக்ஸ் – 3771 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் – 919 டன் என மொத்தம் 8,656 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மணலியில் இருந்து எம்.எப்.எல் நிறுவனம் மூலம் 1,458 டன் யூரியா கோவைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உரங்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் விற்பனை நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் உரம் குறித்து எம்.எப்.எம்.எஸ். இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான அளவு உரங்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.