திருச்சி பஞ்சப்பூர் பிரம்மாண்ட பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்க திட்டம்

 

திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை முழுவதும் வண்ண விளக்குகள் , சாலை மேம்பாடு, மாநகராட்சி முழுவதும் உள்ள மேம்பாலங்களில் வண்ணங்கள் பூசுவது ,வண்ண விளக்குகள் அமைப்பது போன்று பல்வேறு திட்ட பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறது . இதில் குறிப்பாக சென்னைக்கு நிகராக திருச்சியை உருவாக்க வேண்டும், என்று பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி திருச்சி மாவட்டத்தை பெரும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என திட்டங்கள் வகுத்து தற்போது நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க நிதி ஒதுக்கீடு மொத்தம் 350 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. இதில் பேருந்து முனையம் 159 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதில் சுமார் 77 சதவீத பணிகள் நடைபெற்று முடிந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், பேருந்து நிறுத்துமிடம் நான்கிலும் சுமார் 404 பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தரைத்தளம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுத்திக்குள் தரைத்தளத்துடன் முதல் தளத்தை அமைக்கும் பணியானது நிறைவடையும். முதல் தளம் உள்ளூர் பேருந்துகளுக்காகவும், தரைத்தளம் வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்படும். இந்த இரண்டு தளங்களும் 2 எஸ்கலேட்டர் மற்றும் 3 எலிவேட்டர்களை கொண்டதாக கட்டப்படுகிறது. ஒரேநேரத்தில் 820 பயணிகள் அமரும் வகையில் இது கட்டப்பட்டு வருகிறது. 404 பேருந்துகளை தவிர 124 இடங்கள் உடனடியாக வெளியே செல்வதற்கு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் 142 பேருந்து நிறுத்தங்கள் நீண்ட தூர பயண பேருந்துகள் நிறுத்துவதற்கும், 78 பேருந்து நிறுத்தங்கள் குறுகிய தூர பயணத்திற்கு செல்லும் பேருந்துகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது. நகரப்பேருந்துகள் 60 இடங்களில் நிற்கும். இந்த பேருந்து முனையத்தில் முதலில் ஒரு பகுதியை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதுவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருமாதத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். மின்சார பணிகள் அழகுப்படுத்தும் பணிகள் மீதமுள்ளன. அதுவும் விரைந்து நடைபெறும். மொத்தம் 118 கடைகள் 3 ஓட்டல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி செய்தியாளர் H. பஷீர்