திருமுல்லைவாயலில் வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசை அடகு வைத்து பணம் பெற்றவர் கைது…

ஆவடி, டிச, 18, திருமுல்லைவாயலில் வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசை அடகு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் பீகாரைச் சேர்ந்த ராமு‌ என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். உடல் நலம் சரியில்லாமல் உள்ளது.இதனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.என்னிடம் பணம் இல்லை.இந்த வெள்ளி கொலுசுவை அடகு வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்றார்.உடனே ராமு வெள்ளி கொலுசை வைத்து கொண்டு ரூ 6 ஆயிரம் பணம் கொடுத்தார்.அதன் பின்னர் அடகு கடைக்காரருக்கு நகை மீது சந்தேகம் ஏற்பட்டது.உடனே கொலுசை சோதனை செய்து பார்த்தார்.சோதனையில் வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசு என்பது தெரிய வந்தது.உடனே இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் அடகு வைத்து பணம் பெற்ற நபரை பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றவரை மடக்கி பிடித்தனர்.அவர் வைத்து இருந்த பையில் வெள்ளி முலாம் பூசப்பட்ட 6 ஜோடி கொலுசுகள் இருந்தன. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் பிடிபட்ட நபரை விசாரித்த போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் குமார் (வயது 38) என தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட சதிஷ்குமாரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.