ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…

திருச்சி : திருச்சியில் ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார். ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய 2வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திருச்சி கல்லகம் இடையேயான நான்கு வழிச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. செட்டிகுளம் – நத்தம் 4 வழிச்சாலை, காரைக்குடி -ராமநாதபுரம் இருவழி சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர். ரூ.9,000 கோடி மதிப்பிலான எண்ணெய், எரிவாயு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அவர் நாட்டிற்கு அர்ப்பணித்த திட்டங்கள் பின்வருமாறு..

*சேலம் – மேக்னசைட் சந்திப்பு – ஓமலூர் – மேட்டூர் அணைப் பிரிவில், 41.4 கிலோ மீட்டரை இரட்டை ரயில்பாதைத் திட்டம்

*மதுரை – தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் *திருச்சிராப்பள்ளி – மானாமதுரை – விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல்

*விருதுநகர் – தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல். செங்கோட்டை – தென்காசி சந்திப்பு – திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.

*தேசிய நெடுஞ்சாலை 81-ன் திருச்சி – கல்லகம் பிரிவில் 39 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை

*தேசிய நெடுஞ்சாலை 81-ன் கல்லகம் – மீன்சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4/2 வழிச்சாலை

*தேசிய நெடுஞ்சாலை 785-ன் செட்டிகுளம் – நத்தம் பிரிவின் 29 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை

*தேசிய நெடுஞ்சாலை 536-ன் காரைக்குடி – ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோ மீட்டர் இருவழிச் சாலை

*தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம் – திருப்பத்தூர் – வாணியம்பாடி சாலையின் 44 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை ஆகியவை இதில் அடங்கும்.

*திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த சாலைத் திட்டங்கள் உதவும்.

*தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பது இதில் அடங்கும்.

*காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம்-2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி/ இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்கத் தூர்வாரும் கட்டம்-5) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

*இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) ஐபி 101 (செங்கல்பட்டு) முதல் எண்ணூர் – திருவள்ளூர் – பெங்களூரு – புதுச்சேரி – நாகப்பட்டினம் – மதுரை – தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்

*இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (எச்பிசிஎல்) 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா-தருமபுரி மல்டிபிராக்ட் (பிஓஎல்) பெட்ரோலிய குழாய் (வி.டி.பி.எல்) திட்டம் ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

*இந்திய எரிவாயு ஆணையத்தால், (கெயில்) கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் 2 (கே.கே.பி.எம்.பி.எல் 2) திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூர் வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

*சென்னை வல்லூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் மல்டிபிராக்ட் குழாய்கள் அமைத்தல் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

*கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்) விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் (டி.எஃப்.ஆர்.பி) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

*திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்து வைத்தார்.