44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஆரம்பம்… செஸ் விளையாடி முதல்வர் ஸ்டாலின் அசத்தல்..!!

மாமல்லபுரத்தில் இன்று முதல் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடி அசத்தினார்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் அதிகமான செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கான தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனி அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்தப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன், சேர்ந்து சிறிது நேரம் செஸ் விளையாடினார். இது அனைவரின் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

மேலும், அதில் ஒருபகுதியாக, மாமல்லபுரத்தில் 60 லட்சம் ரூபாய் செலவில் 45 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு உள்ள சிற்பக்கலைத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.