திருச்செந்தூரில் குழந்தை கடத்தலில் கைதான பெண் ஆலாந்துறை காவல் நிலையத்தில் மர்ம சாவு.. நீதித்துறை தீவிர விசாரணை- போலீசார் குவிப்பு.!

கோவை : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் தனது மனைவி மற்றும் தன் ஒன்றரை வயது ஆண்குழந்தை ஹரிஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கடலில் குளிப்பதற்காக சென்றனர். அப்போதும் முத்துராஜ் கடைக்குச் சென்றார் .இந்த நிலையில் ஒன்றரை வயது குழந்தை அழுது கொண்டே இருந்தது . அப்போது குளிக்க வந்த இடத்தில் திடீர் பழக்கமான 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அந்த குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக தூக்கிச் சென்றார் .பின்னர் அந்த பெண்ணையும் குழந்தையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருச்செந்தூர் கோவில் கடற்கரை புறக் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் கோவிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவிறக்க காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 40 வயது மதிக்கதக்க பெண், ஆண் ஒருவருடன் குழந்தையை மோட்டார் சைக்கிள் கடத்திச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண் பதிவுஎண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் அவர்கள் தொடர்பான தகவலை திருச்செந்தூர் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்திச் சென்றது தம்பதி என்பது தெரியவந்தது. இதற்கிடையில் குழந்தையை கடத்திய தம்பதி கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து திருச்செந்தூர் போலீசார் கோவை போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் ஆலந்துறை போலீசார் பூண்டி முட்ட த்துவயல் குளத்தேரி அருகே பதுங்கி இருந்த அந்த பெண்ணையும் அவரது கணவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் ( வயது 45 )அவரது மனைவி திலகவதி ( வயது 40) என்பதுதெரியவந்தது. குழந்தையை கடத்தியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் அவர்களிடம் குழந்தை இல்லை. அது குறித்து கேட்டபோது சேலத்தில் உள்ள வீட்டில் தங்களது உறவினர்களிடம் விட்டுவிட்டு கோவை வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தவும், திலகவதியும் பாண்டியனையும் ஆத்தூர் அழைத்துச் சென்று குழந்தையை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க முயன்றனர். இதற்காக அவர்கள் 2 பேரையும் ஆலாந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தம்பதியுடன் போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது திலகவதி போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு போளுவாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி,டி ஐ .ஜி சரவண சுந்தர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் ஆலந்துறை போலீஸ் நிலையத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர் .மேலும் திலகவதி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்த பெண் திடீரென்று மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திலகவதி இறப்பு குறித்து விசாரணை நடத்திவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது காவல் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும்பெண்ணின் இறப்பு குறித்து நீதித்துறை விசாரணையும் நடந்து வருகிறது .இந்த நிலையில் கோவை போலீசார் குழந்தை கடத்தல் தொடர்பாக சேலம் ஆத்தூர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து போலீசார் ஆத்தூரில் உள்ள திலகவதியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்து ஒன்றரை வயது ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த குழந்தையை திருச்செந்தூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்வரி கூறியதாவது:- குழந்தையை கடத்திய தம்பதி கோவை ஆலந்துறை பகுதியில் இருக்கும் தகவலை திருச்செந்தூர் போலீசார் தெரிவித்தனர். இதை யடுத்து அவர்கள் கொடுத்த தகவல் பேரில் செல்போன் சிக்னல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் பிடித்தனர். அப்போது அவர்களிடம் கடத்தப்பட்ட குழந்தை இல்லாததால் விசாரணைக்காக ஆலாந்துறைகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீஸ் விசாரணையில் தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒன்றரை வயது குழந்தையை திருச்செந்தூரில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான் திலகவதி கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். அவர் ரத்த அழுத்தம் பாதிப்பு காரணமாக இறந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அந்த பெண் இறந்ததற்கான முழு விவரம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்..குழந்தை கடத்தலில் கைதான பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தை யொட்டி ஆலாந்துறை காவல் நிலையத்திலும் கோவை அரசு மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது…