திருமணமான ஒரு வருடத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை..

கோவை:
ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பட்டி தாசரிபாளையத்தை சேர்ந்தவர் பிரவு .இவரது மனைவி ஹேமலதா (வயது 28). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ஹேமலதா கணவரிடம் கோபித்துக்கொண்டு கோவை சரவணம்பட்டி கணபதி நகரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.அவருக்கு கடந்த 12 வருடங்களாக வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். கணவரை பிரிந்து வந்ததால் மிகுந்த மனவேதனை அடைந்த ஹேமலதா 2 முறை தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது பெற்றோர் காப்பாற்றினர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது தாயிடம் கோபித்துக்கொண்டு கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார்.பின்னர் ஹேமலதா அங்கு கட்டி முடிக்கப்படாத 9 மாடி அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள 4-வது மாடியில் இருந்து கீழே குத்தித்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடிய தங்களது மகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு வருடத்தில் ஹேமலதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.