பிரதமர் மோடி வருகையால் தமிழ்நாடு வளநாடாக மாறுகிறது- அண்ணாமலை பேச்சு.!!

பிரதமர் மோடி வருகையால் தமிழ் நாடு வள நாடாக மாறுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருவதாகவும், 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் வளர்ச்சி, போக்குவரத்து மறுமலர்ச்சி, கட்டமைப்புக்களில் எழுச்சி, வேலைவாய்ப்புக்களில் புரட்சி, மக்கள் நலத்தில் புத்துணர்ச்சி, எனப் பல்வேறு துறைகளை சார்ந்த புதிய முன்னேற்றத் திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது என்றார்.

மேலும் மத்திய அரசின், தமிழ்நாட்டிற்கான தன்னிறைவுத் திட்டங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

• ரூபாய் 500 கோடி மதிப்பில் மதுரை-தேனி 75 கிலோ மீட்டர் அகல ரயில்பாதை அமைக்கப்படும்.

• ரூபாய் 500 கோடி மதிப்பில் தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை அமைக்கப்படும்.

• 850 கோடி ரூபாய் மதிப்பில் 115 கிலோ மீட்டர் எண்ணூர்-செங்கல்பட்டு, மற்றும் 271 கிலோமீட்டர் 850 கோடி ரூபாய் மதிப்பில் திருவள்ளூர்- பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்.

• 116 கோடி ரூபாய் செலவில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில், கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை வழங்கப்படுகிறது.

• ரூபாய் 14,870 கோடி ரூபாய் செலவில் சென்னை – பெங்களூரு 262 கிலோ மீட்டர் அதிவிரைவு சாலை அமைக்கப்படும்.

• ரூபாய் 5,850 கோடியில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பக்திகளை இணைக்கும் 21 கிலோமீட்டர் நீள நான்கு வழி பறக்கும் சாலை திட்டம்.

• 3,870 கோடி ரூபாய் செலவில் தர்மபுரி-நெரலூரு 94 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை திட்டம்.

• 720 கோடி ரூபாய் செலவில் மீன்சுருட்டி-சிதம்பரம் பகுதிகளை இணைக்கும் 31 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை

• 1,800 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம்

• திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் பிரதமரின் ‘விரைவு சக்தி’ (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்கா.

• 1,200 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா அமையும் திட்டம் தொடங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி வருகையால் விளையும் நன்மைகள்
மற்றும் தொலைநோக்கில் பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வரும் 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் உள்ளது.ஆகவே போக்குவரத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக் கணக்கான பணத்தை சரக்கு போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர்.

இந்தியாவில் சரக்கு போக்குவரத்து செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.மற்ற முக்கிய நாடுகளில் இது 8 சதவீதமாகவே உள்ளது ஆகவே தயாரிப்பாளர்களின் சுவைக் குறத்து ஏற்றுமதியை அதிகரிக்க புதிய கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

ரயில் மூலம் சரக்குகளை கொண்டு சென்றால், செலவும் குறைவதோடு, நேரமும் சேமிக்கப்படும் என்ற போதிலும் உரிய கட்டமைப்புகள் இல்லாததால், 60 சதவீத பொருட்கள் சாலை மார்க்கமாகவே நமது நாட்டில் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆகவே பொருட்களை கொண்டு செல்ல தேவைப்படும் அளவிற்கு சாலைகளுக்கேற்ற வாகனங்களும், வாகனங்களுக்கேற்ற சாலைகளும் உருவாக்க கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும், இந்த பொருட்களை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் ஆகிய கட்டமைப்புகள் உருவாக்க கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது

புதிய தொலை நோக்கு பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய பெருந்திட்டம் ‘அதி விரைவு சக்தி’ (GATI Sakthi)
தேசியத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே, 35 பன்முனை சரக்கு பூங்காக்களை நாடு முழுக்க அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சென்னையில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையம் ஆகியவற்றை ரயில் மற்றும் சாலை போக்குவரத்தோடு இணைக்கும் முனையமாக மெப்பேடு பூங்கா செயல்படும்.

தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்து தொய்வின்றி, விரைவாக, குறித்த நேரத்தில் சென்றடைவதோடு , எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவை குறைக்கும்.

சென்னையில், வாகனங்களால் ஏற்படும் மாசு குறையும்.சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற இந்த பூங்காவானது பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.

தமிழ்நாட்டில் இத்திட்டப்பணிகளால் பயனடையும் பகுதிகள் இனி சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நிலையில், பல்வேறு சிறு குறு வர்த்தகம் வளரும்.

பிரதமரின் அறிவிப்பின் படி VOCAL FOR LOCAL என்ற தமிழக தொழில்துறை மற்றும் தமிழக வர்த்தகம் மேம்படுவதோடு, தமிழக உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இந்த ‘அதிவிரைவு சக்தி’ தேசிய பெருந்திட்டத்தின் மூலம் அதிக பயனடைவது உறுதி செய்யப்படுகிறது என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.