கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபீனுக்கு வெடி மருந்து வாங்க பணம் தந்தது யார்? 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டம்..!

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் ( வயது 28 )பலியானார் அல்லவா? இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக முகமது அசாருதீன் (வயது 23) அப்சர் கான் ( வயது 28) முகமது தர்கா (வயது 23) முகமது ரியாஸ் ( வயது 27) பெரோஸ் இஸ்மாயில்( வயது 26) முகமது நவாஸ் இஸ்மாயில்( வயது 27) ஆகிய 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ விற்கு மாற்றப்பட்ட நிலையில் டி.ஐ.ஜி. வந்தனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித், ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரி சுந்தரேசனிடமும் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்குமூலத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். கார்வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேசா முபின் பழைய புத்தக கடை நடத்தி வந்துள்ளார் .அவருக்கு போதியவருமானம் இல்லை .இந்த நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால் முபின், கைதான அப்சல் கான் உதவியுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்து வெடி மருந்துகளை வாங்கியுள்ளார். அவரது வீட்டில் இருந்து மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க அவருக்கு பணம் கொடுத்து உதவியது யார் ?என்ற சந்தேகம் என் ஐ.ஏ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச தீவிரவாத கும்பலிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளதா? அவருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்பதை அறிய வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர் .மேலும் முபின் கேரள சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் அசாருதீன் என்பவரை சந்தித்ததாக கூறப்படுகிறது எனவே விய்யூரில் உள்ள சிறை அதிகாரிகளிடம் அசாருதீனை சந்தித்தவர்கள் யார்? என்று என் ஐ.ஏ. அதிகாரிகள் பட்டியல் கேட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதான 6பேரை கோவை மா நகர தனிப்படையினர் காவலில் எடுத்து விசாரித்த பின் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர் .அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது’ இந்த நிலையில் கைதான் 6 பேரை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க என் ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் .இதற்காக கோவை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். கார் வெடிப்பு வழக்கில் முழு பின்னணி குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.