இப்ப என்ன பண்ணுவீங்க…. 25 க்கு தான் வரி… அப்போ 26 கிலோவாக போடுங்க… ஜிஎஸ்டி ஐ தவிர்க்க அரிசி ஆலைகளின் அசத்தல் முடிவு ..!!

25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட Brand & Non Brand அரிசிகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க தொடங்கியுள்ளனர்.

47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி 25 கிலோ வரையிலான பேக்கிங் செய்யப்பட்ட Brand & Non brand அரிசிகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டதால் அரிசியின் விலை கூடுதல் ஆனது.

ரகத்திற்கு ஏற்றபடி அரிசி உள்ள நிலையில் , தோராயமாக 1000 ருபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பேக்கிங் , 5% வரி விதிப்பிற்கு பிறகு 50 ருபாய் உயர்ந்து 1050 க்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய முயற்சியாக 26 கிலோ அரிசி பேக்கிங் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.

உணவு துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பேசிய பின்பே இந்த 26 கிலோ பேக்கிங் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 25 கிலோ அரிசி பேக்கிங்கிற்கு பதிலாக 1 கிலோ கூடுதலாக வைத்து 26 கிலோ பேக்கிங் செய்யும் போது மக்களுக்கு 50 ருபாய் குறைவாக கொடுக்க முடியும் என்கின்றனர் அரிசி வியாபாரிகள். LMA Legal Metrology Act விதிகளின் படி ஒவ்வொரு 5 கிலோ எடை கொண்ட பேக்கிங் தான் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்ததாகவும் , தற்போது அந்த சரத்து ரத்து செய்யப்பட்டு ஜி.எஸ்.டி விதிகளின் படி 25 கிலோவிற்கு மேல் செல்லும் போது வரிக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன் பின்பே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர். 25 கிலோவிற்கு உட்பட்டது சில்லறை வணிகம் என்றும், 25 கிலோவிற்கு மேல் உள்ளது மொத்த வியாபரம் என்றும் பிரித்துள்ள நிலையில் ஜி.எஸ்.டி விதியின் படி அரிசிக்கு சில்லறை வர்த்தகம் செய்வதற்கு மட்டுமே 5% வரி விதித்துள்ளதாகவும், அதனால் 26 கிலோ பேக்கிங் செய்வது முழுக்கவே சட்டத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.