எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க… மீண்டும் அடுத்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி..!

யர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, குடிநீர் வரவில்லை என கேட்ட பொதுமக்களிடம் ‘அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க.’என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது.

தி.மு.க அமைச்சர்கள் அடிக்கடி அதிரடியாக ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது என்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், உயர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, குடிநீர் பிரச்னை குறித்து கேட்ட பொதுமக்களிடம் ‘எனக்கு நீங்கள் ஓட்டு போட்டு கிழிச்சிட்டிங்க.’ என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா திங்கள்கிழமை (மார்ச் 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார்.

இந்த நிகழ்சியில் அமைச்சர் பொன்முடி, ‘உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன்’ என்று பேசினார். அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக் கூறி கூச்சல் எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள். நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு தெரியும்’ என்று கோபமாகப் பேசினார். ஆனாலும், ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள் என அனைவருக்கும் நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கூறியது போல செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

குடிநீர் பிரச்னை குறித்து கிராம மக்கள் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க என்று பேசியது எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் பொன்முடி, தமிழக அரசின் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் குறித்து பேசுகையில், இப்போது பெண்கள் எல்லாம் ஓசியில் போகிறார்கள் என்று பேசியது சர்ச்சையானது.