கேரளாவையே அதிர வைத்த இளம்பெண் விஸ்மயா மரணம்… கணவன் தான் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா எனும் இளம்பெண்ணுக்கு இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர்.

ஆனால்,ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விஸ்மயா-கிரண் தம்பதியினர் இடையே திடீரென பிரச்சனைகள் உருவாக தொடங்கியது. திருமணமாகி சற்று காலம் சென்றதும் விஸ்மயாவை அடிக்கடி அடிப்பதும் கொடுமைப்படுத்துவதுமாக இருந்துள்ளார் கிரண்.மேலும் தனக்கு கொடுத்த டொயோட்டா கார் கூட தேவையில்லை,10 லட்சம் கொடு 20 லட்சம் கொடு என அடிக்கடி விஸ்மயாவை வரதட்சனை கொடுமை செய்து வந்துள்ளார்.மேலும் ஆணிகள் மற்றும் கட்டைகளை வைத்து விஸ்மயாவின் முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே,கடந்த ஆண்டு விஸ்மயா கிரண் ஆகியோர் விஸ்மயா வீட்டிற்கு சென்றபோது,விஸ்மயாவின் பெற்றோர் முன்னிலையிலேயே குடித்துவிட்டு கிரண் விஸ்மயாவை அடித்துள்ளார்.அதன்பின்னர்,இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட கிரண், சில நாட்களுக்கு பின்பதாக இரு குடும்பமும் சமரசம் பேசியதால் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் விஸ்மயா தனது தாய் தந்தையுடன் அவரது வீட்டிலேயே இருந்த நிலையில்,இரண்டு மாதங்கள் தனது பெற்றோர் வீட்டிலேயே இருந்த விஸ்மயா தேர்வு எழுத கல்லூரி சென்ற பொழுது கல்லூரிக்கு நேரில் சென்ற கிரண் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு விஸ்மயாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

முதல் ஒரு வாரம் நல்ல முறையாக விஸ்மயாவுடன் இருந்த கிரண் திடீரென மீண்டும் விஸ்மயாவை மோசமாக அடிக்க தொடங்கியதாக கூறப்பட்டது. இருப்பினும்,குடும்பத்தினர் வருத்தப்படக் கூடாது என்பதற்காக விஸ்மயா வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை தனது குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமல் இருந்தார்.ஆனால் தனது சித்தப்பா மகனிடம் மட்டும் இது குறித்து விஸ்மயா அவ்வப்போது தெரியப்படுத்தி இருந்தார்.அவரது சித்தப்பா மகனுக்கு,”கணவர் எனது முகத்தில் அதிகமாக அடித்து உதைக்கிறார்” என வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தனது புகைப்படங்களையும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.

இந்த சூழலில்,கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார்.இதனை அடுத்து விஸ்மயா அப்பா திரிவிக்கிரமன் போலீசில் கிரண் தான் தன் மகளை கொடுமைப்படுத்தி,கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார்.மேலும் உடலில் மோசமான காயங்கள் இருப்பதால் போலீசாரும் இது கொலைதான் என சந்தேககித்ததுடன் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது தொடர்பாக வரதட்சனை கொடுமை கொலையாகவும் பதிவு செய்தனர்.

இதனையடுத்து,100 பவுன் நகை கொடுத்து ஒரு ஏக்கர் நிலம், டொயோட்டா கார் என இவ்வளவு ஆடம்பரமாக வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வைத்த பெண்,வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.

இதனைத் தொடர்ந்து,கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், இனிமேல் கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் தான் குற்றவாளி என கேரளாவின் கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இதனால், ஜாமீனில் உள்ள கிரணை கைது செய்யவதற்கான நடவடிக்கை விரைவில் நடைபெறவுள்ளது.தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில்,அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.