சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு… கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சிறப்புரை..!

சென்னைக்கு 5 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்துள்ளார்.

தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள 5 நாள் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த 5 நாள் பயணத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார்.

அவற்றில் முக்கியமாக வருகிற 28ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்கிறார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் திருவுருவ சிலை நிறுவப்படும் என்று கடந்த மாதம் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மேலும் ஒரு மாத காலத்திற்குள் சிலை வடிவமைக்கப்பட்டு திறக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி ரூ.1.56 கோடி செலவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே வருகிற 28-ம் தேதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை சிறந்து வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.