கோவை வழியாக திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!!

கோவை:
வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக, வரும், 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறியிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:05905), புதன் இரவு 8.50-க்கு அசாம் மாநிலம் திப்ருகர் சென்றடையும். இதேபோன்று செவ்வாய்கிழமைகளில், அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 05906) வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். திப்ருகரில் இருந்து இன்று மற்றும் வரும் 8, 15-ந் தேதிகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு ஒன்று, மூன்றடுக்கு-5, படுக்கை வசதி-11, பொது இரண்டாம் வகுப்பு-3, சரக்கு பெட்டி-1, என 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-திப்ருகர் ரயில், திங்கட்கிழமை காலை 4.12-க்கு கோவை ரயில் நிலையம் வந்து செல்லும். திப்ருகர்-கன்னியாகுமரி ரயில், வெள்ளிக்கிழமை, கோவைக்கு காலை, 10.42-க்கும் வந்து செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.