ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு உடனே அவசர தடை சட்டம் கொண்டு வர வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்..!

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் & போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; எடுக்கப்படும் என்று நம்புகிறேன்! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் வல்லுனர் குழு அமைந்து பரிந்துரை பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு, சூதாட்ட நிறுவனங்களுடன் கலந்தாய்வு என தேவைக்கும் அதிகமாகவே தமிழ்நாடு அரசு முன்தேவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது! அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத் தடையாகத் தான் இருக்க வேண்டும். எனவே, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும்; ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு உடனே முடிவுரை எழுதப்பட வேண்டும்! ” என்று பதிவிட்டுள்ளார்.