அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு- திங்கட்கிழமை விசாரணை..!

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று வழங்கிய தீர்ப்பு: ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அன்று பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லது. ஜூன் 23ம் தேதி நிலைமையே தொடரும் எனக்கூறினார். இதனை தொடர்ந்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு ஆஜராகி, தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைவோம் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்து கொண்டிருந்த போதே, பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.