பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு தாயுடன் வந்த இளம்பெண் காதலனுடன் ஓட்டம்..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்து விட்டு பேன்சி கடையை கவனித்து வந்தார்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்த சேலத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் தாய்க்கு தெரிய வரவே அவர் தனது மகளை கண்டித்தார்.

சம்பவத்தன்று இளம்பெண்ணும் அவரது தாயும், சிவகங்கைக்கு செல்வதற்காக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது இளம்பெண்ணின் தாய் கழிவறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது இளம்பெண்ணை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அதற்கு இளம்பெண் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழப்போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து இளம்பெண்ணின் தாய் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் அவரது தாயுடன் பொள்ளாச்சிக்கு வந்த போது அதே பஸ்சில் வந்த இளம்பெண்ணின் காதலன் அவரை அழைத்து சென்றது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.