தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு – டி.ஜி.பி.சந்தீப் மிட்டல் ஆலோசனை..!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக மாவட்ட காவல்துறை, துறை முகம், இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, வனத்துறை, மீன்வளத்துறை, சுங்க இலாகா, க்யூ பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிளுடன் தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக அந்தந்த துறை அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கருத்துக்களை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் இயக்குனர் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களையும் அழைத்து அவர்களின் நலன் கருதியும், பாதுகாப்பு குறித்தும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மீனவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பாதுகாப்பு சம்மந்தமாக அவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல்துறை கூடுதல் இயக்குனர், மீனவர்கள் தெரிவித்த குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் சேர்வதற்காக கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கடலோர காவல் படை படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 120 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் 1000 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் முதல் கட்டமாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 700 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இது போன்ற வாய்ப்புகளை மீனவ இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும் காவல்துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் வ.உ.சி துறைமுகம் சார்பாக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், இந்திய கடலோர காவல் படை துணை தளவாய் குண்டூர் வருண், இந்திய கடற்படை லெப்டினன்ட் ஸ்டாலின், வ.உ.சி துறைமுக மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை தளவாய் வி.பி சிங், சிர்க்கோனியம் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி தளவாய் சவ்ரவ் ரத்தோர், மன்னார் வளைகுடா வனத்து சரக அலுவலர் ஜினோ பிளெஸ்ஸில், மீன்பிடித்துறைமுக மீன் வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ், தூத்துக்குடி சுங்க இலாகா கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி சத்தியராஜ், திருச்செந்தூர் வசந்தராஜ், விளாத்திக்குளம் ஜெயச்சந்திரன், கடலோர பாதுகாப்பு குழுமம் பிரதாபன், காவல் ஆய்வாளர்கள் கடல்சார் அமலாக்கப்பிரிவு உமையொருபாகம், க்யூ பிரிவு விஜய அனிதா, ஐ.பி. ஜெயக்கிருஷ்ணன், சிறப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை மகாதேவன், மரைன் காவல் நிலையம் சைரஸ் ஆகியோர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்..