அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக வந்த பரபரப்பு புகார்- அமைச்சர் விளக்கம்..!

சென்னையில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளளிடம் கூறியதாவது:-

செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுந்துள்ளது.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன. கையில் ஊசி செலுத்தியது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

மருத்துவர்களாக இருக்கட்டும், அல்லது செவிலியர்களாக இருக்கட்டும். அவர்கள் யாரும் பாதிப்பு ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை. பாதுகாக்கத்தான் வருகிறார்கள். நிச்சயம் உண்மைத்தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சையின்போது கவனக்குறைவு இருந்துள்ளதா? என கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பொது மருத்துவத்துறை உள்ளிட்ட 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு தலையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன என்றும், சிகிச்சையின் போது கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.