இனி இங்கு ரவுடிகளுக்கு இடம் கிடையாது… ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்- சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்.!!

சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(மார்ச் 15) தொடங்கி வைத்தார்.‌

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது 8 மாதங்களாக சென்னையில் ரவுடிகள் கொலை 20 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் DARE ஆப்ரேஷன் (Drive against Rowdy Element) மூலம் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்பாட்டிற்கு தயாராக உள்ள சைபர் ஆய்வகத்தில் பயிற்சி நடைபெற்று வருகிறது. விரைவில் சைபர் ஆய்வகம் செயல்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்தார்.

சிறப்பு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கம்

இந்த சிறப்பு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அடுத்து வரும் 15 நாட்களுக்கு, சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 60 பேர் முறையான ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி சென்று, போக்குவரத்து விதிகளை மீறிய வழக்குகள் இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளனர்.