உலகத்தில் எந்த நாட்டிலும் அவதூறு வழக்குக்கு சிறை கிடையாது: ராகுல் தகுதி நீக்கம்.. நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்-பழ.கருப்பையா பேட்டி.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், எழுத்தாளருமான பழ. கருப்பையா கலந்து கொண்டு காந்தி தேசம் என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு இ. கம்யூ கட்சி நிர்வாகி செயராசு தலைமை தாங்கினார். சுகன்யா முன்னிலை வகித்தார். முருகன் வரவேற்றார். இதை தொடர்ந்து பழ. கருப்பையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மக்களவை செயலகம் அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது தவறு. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது சரி. அவதூறு வழக்குக்கு சிறை தண்டனை விதிப்பது எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை. இந்தியாவில் பாசிச ஆட்சி நடைபெறுகிறது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை மக்கள் அரசியலாக்க வேண்டும். இந்த நடவடிக்கை வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறினார். முன்னதாக சத்தியமங்கலத்திற்கு வந்த பழ. கருப்பையாவை முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். முடிவில் சரவணகுமார் நன்றி கூறினார்..