குழந்தை வரம் வேண்டி சாமியாரிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை- கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவரது மகள் நேத்ராவதி (36). நேத்ராவதிக்கும் கார்த்திக் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கார்த்திக் லட்சுமி நாராயணன் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். திருமணத்தின் போது 15 லட்சம் ரூபாய் பணம் 100 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு கார்த்திக் லட்சுமி நாராயணன் வேறு நிறுவனத்திற்கு பணிக்கு மாறியதால் பெங்களூருக்கு மனைவி நேத்ராவதியுடன் குடி பெயர்ந்து வசித்து வந்தார் .பின்னர் 2020 ஆம் ஆண்டு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தனர் .திருமணத்திற்கு முன்பு கார்த்திக் லட்சுமி நாராயணன் நடத்தி வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க வழக்குகளுக்காக நேத்ராவதியின் குடும்பத்தார் 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்தனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையத்தில் நேத்திராவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .ஆனாலும் கரு கலைந்து போனது .இந்நிலையில் கார்த்திக் லட்சுமி நாராயணனுக்கு பெங்களூரில் உள்ள சுவாமி நித்தியானந்தாவின் பிரசங்க கூட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் மகேந்திரன் என்பவர் மூலம் பிரபுதாநந்தா என்ற சாமியார் மத்திய பிரதேச மாநிலம் தட்டுவாடா என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி வருவதாக தெரியவந்தது .தொடர்ந்து பிரபுதாநந்தாவை மத்திய பிரதேசத்திற்கு சென்று கார்த்திக் லட்சுமி நாராயணன் நேரில் சென்று சந்தித்து அவர் கூறிய பூஜை முறைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். கார்த்திக் லட்சுமி நாராயணன் இரவு நேரங்களிலும் நவராத்திரி போன்ற முக்கிய தினங்களிலும் ஆக்ரோஷமான பூஜை முறைகளை செய்து வருவதை பார்த்த நேத்ராவதிக்கு அவருடைய நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .தொடர்ந்து இதுகுறித்து நேத்ராவதி தனது கணவரிடம் கேட்ட போது குழந்தை வேண்டும் என்பதற்காக தான் பூஜைகள் செய்து வருவதாக கூறியிருக்கிறார் மேலும் பிரபுதாநந்தா சாமியாரிடம் குழந்தை வேண்டுமென முறையிடு அப்போதுதான் நமக்கு குழந்தை கிடைக்கும் என கூறியிருக்கிறார். இதை நம்பிய நேத்ராவதி தனது கணவருடன் மத்திய பிரதேசத்தில் உள்ள பிரபுதாநந்தா சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று 20 நாட்கள் தங்கி இருந்து கணவனின் கட்டாயத்தின் பேரில் சேவை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவைக்கு நேத்ராவதி வந்திருந்தார் .அதன் பிறகு அவரது தந்தைக்கு விபத்து ஏற்பட்டதால் தொடர்ந்து கோவையிலேயே அவர் இருந்துள்ளார். மீண்டும் ஏப்ரல் மாதம் பெங்களூருக்கு கணவர் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் கார்த்திக் லட்சுமி நாராயணன் தனது மனைவி நேத்ராவதியை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு வந்திருந்த பிரபுதாநந்தா சுவாமிகளை சந்திக்க சென்றுள்ளார் .அப்போது நேத்ராவதியிடம் தனிமையில் பேசிய சாமியார் பிரபுதாநந்தா தனது ஆசைகளை நிறைவேற்றினால் தான் உனக்கு குழந்தை பிறக்கும் என்றும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னையும் கணவனையும் பிரித்து விடுவேன் என கூறி இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நேத்ராவதி தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். அப்போது அவரது கணவர் குருஜி சொல்படி நடந்து கொள் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே கார்த்திக் லட்சுமி நாராயணனின் நண்பர் ஒருவரின் மனைவி பிரதீபா என்பவர் செல்போன் மூலம் நேத்ராவதியை தொடர்பு கொண்டு உள்ளார். அவரும் பிரபுதாநந்தா சுவாமிகள் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால் குழந்தை பெற வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார் .இதற்கு நேத்ராவதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கார்த்திக் லக்ஷ்மி நாராயணன் குருஜி நந்தாவின் ஆசைகளை நிறைவேற்றாவிட்டால் விவாகரத்து செய்து விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். பின்னர் நேத்ராவதியை கோவையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு விட்டு சென்று விட்டார். இந்நிலையில் கார்த்திக் லட்சுமி நாராயணன் அனுமதி இல்லாமல் நேத்ராவதி உள்ளே நுழையக்கூடாது என பெங்களூரில் உள்ள அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நேத்ராவதி தனது கணவர் கார்த்திக் லக்ஷ்மி நாராயணன், பிரபுதாநந்தா சுவாமிகள் மற்றும் அவரது தோழி பிரதீபா மீது பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் அவர் கோவைக்கு மீண்டும் திரும்பி வந்தார். தொடர்ந்து தனது கணவரிடம் போனில் பேச முயன்ற போது கார்த்திக் லஷ்மி நாராயணன் தனது குருஜி பிரபுதாநந்தா சுவாமிகள் உன்னுடன் வாழக்கூடாது என சொல்லிவிட்டார் என கூறியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நேத்ராவதியுடன் போன் மூலம் பேசிய பிரபுதாநந்தா சாமிகள் என்னுடைய ஆசைகளை நிறைவேற்றினால் மட்டுமே உன்னை கணவனுடன் சேர்த்து வைக்க பூஜைகள் செய்வேன் என கூறி மிரட்டியுள்ளார் .அதேபோல பிரதீபாவும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் அனுப்பி குருஜி சொல்வதை கேட்டுக் கொள் என மிரட்டியுள்ளார் .இதை தொடர்ந்து நேத்ராவதி தனது கணவர் கார்த்தி லஷ்மி நாராயணன் ,பிரபுதாநந்தா சுவாமிகள் மற்றும் கார்த்திக் லட்சுமி நாராயணனின் தோழி பிரதீபா ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.