கணவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மனைவி கைது..!

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார். ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ரங்கன் தினசரி மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வெளியே சென்ற ரங்கன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கணவர் மீது கோகுல ஈஸ்வரிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
பின்னர் ரங்கன் குடிபோதையில் வீட்டில் படுத்து தூங்கினார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வெளியே கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த ரங்கனின் தலையில் போட்டார். இதனால் ரங்கன் சத்தம் போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரங்கனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கோகுல ஈஸ்வரியை கைது செய்தனர். தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரத்தில் ரங்கனை கொலை செய்ததாக கோகுலஈஸ்வரி தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின் கோகுலஈஸ்வரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.