குடிபோதையில் தந்தையை உருட்டுகட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பி. கே. எஸ். காலனி காமராஜ் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 73) இவரது மனைவி கமலம் (வயது 68 )இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர் . இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது .இந்த நிலையில் 3-வது மகன் செந்தில்குமார்  ( வயது 40 )தனது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 6 மாதங்களாக பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவில் தந்தை நடராஜனும் மகன் செந்தில்குமாரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது .அதன் பின்னர் சமாதானம் அடைந்து 2பேரும் தூங்கச் சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் நடராஜன் தூக்கத்தில் இருந்து எழுந்து நடந்து வந்த போது நிலை தடுமாறி  கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி செந்தில்குமார் ஆம்புலன்ஸசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடராஜனை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு இடையில் நடராஜரின் சாவில் சந்தேகம் இருப்பதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசருக்கு புகார் சென்றது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனையில் அவரது தலையில் உருட்டுகட்டையால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மகன் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் உருட்டு கட்டையால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறினார். கொலையை மறைக்க தூக்க கலக்கத்தில் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக கூறி நடித்ததாகவும் கூறினார். இதை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.குடிபோதையில் தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.