அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆகிறது..!

ட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது:

சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுவதாகவும், 58 வயதிலேயே பணி ஓய்வு அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதைத்தான் உறுப்பினர் சதன் திருமலைக்குமாரும் அவையில் பேசினார்.

முதல்வருடன் கலந்து பேசி, போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகங்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இக்கழகங்கள் சீரழிந்ததற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். 2006-11 திமுக ஆட்சியில் 48,898 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 38,399 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் 2016-2021 வரையிலான 5 ஆண்டு ஆட்சியில் ஒரு நியமனம் கூட நடைபெறவில்லை. பணி ஓய்வையும் 60 வயதாக உயர்த்தினீர்கள். அதனால் ஏற்படும் நிதி சுமை குறித்து கவலைப்படவில்லை.

.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு புத்துயிரூட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.