டீக்கடையில் புகுந்து சேதபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது – தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது.!!

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 31) இவர் நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் என்பவரது டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கல்லா மேஜையை தட்டி புகையிலை கேட்டார். அதற்கு அவர் இங்கு புகையிலை விற்பனை செய்வதில்லை என்று கூறினார் . இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி அங்கிருந்த சோடா பாட்டில்களை உடைத்தும், மேஜை
நாற்காலிகளையும், கேஷியர் பிரபாகரனின் இருசக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .இது குறித்து பிரபாகரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த மதன்குமார் என்ற அட்டு மதன் ( வயது 27) என்பவரை நேற்று இரவு கைது செய்தார். இவரை துரத்தி செல்லும் போது அங்குள்ள பாலத்தில் இருந்து மதன் குமார் கீழே விழுந்தார் . இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட கொள்ளையன் அட்டு மதன் மீது கோவையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவன் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளான். அவரிடமிருந்து கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்கள் மீடக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.