அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் – இபிஎஸ் பேட்டி..!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் எங்களது விருப்பம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் உள்ளவர்கள் முடிவு செய்ய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா தேசிய தலைவர் நட்டா ஆகியோர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக அவர்களே சொல்லிவிட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து விலகிய ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உறுதி செய்த நிலையில் இன்று மீண்டும் ஒருமுறை இந்த பேட்டியின் மூலம் உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.