கோவையில் அ.தி.மு.க கவுன்சிலர் மீது சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்… அரசியல் காரணமா..?என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை..!!

கோவை அருகே உள்ள காரமடை மருதூர் ஊராட்சியில் அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளவர் சரவணன் (வயது 37).

இவர் காரமடையில் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கவுன்சிலர் சரவணன் தனது காரில் காரமடை குந்தா காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 பேர் சரவணனின் கார் மீது மோதினர். இதை பார்த்த அவர் காரை நிறுத்தி வெளியே வந்து அந்த வாலிபர்களிடம் மோதியது குறித்து தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
அரசியல் காரணமா
பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். 3 வாலிபர்களும் தாக்கியதில் சரவணனுக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இதுகுறித்து கவுன்சிலர் சரவணன் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் கவுன்சிலர் சரவணனை தாக்கிய மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டியில் தாக்கினார்களா அல்லது அரசியல் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.