நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
மத்திய அரசு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரின் 26 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். நீட் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் நிகழ்ந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் அவரின் கோரிக்கையாக இருந்தது.சோனம் வாங்சுக்கின் இந்த போராட்டத்துக்கு மிகப்பெரிய ஆதரவு இந்தியா முழுவதும் இருந்து கிடைத்தது. இந்த போராட்டத்திற்கு அவருக்கு தூண்டுகோலாக சமீபத்தில் தொடங்கப்பட்டு மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக மாறிய வேலையில்லாத இளைஞர்களின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இருந்தது.
ஜூன் 28ம் தேதி முதல் சோனம் வாங்சுக் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நாளுக்கு நாள் அவரின் உடல்நிலை மோசமாகி கொண்டே வந்தது. இதனிடையே கடந்த ஜூலை 18ம் தேதி அதிகாலையில் நீதிமன்ற உத்தரவு மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவரை சிகிச்சைப் பெற அனுமதித்தது.
கடந்த ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சூழலில் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆகியவை இணைந்து போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருக்க, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரான அபிஜீத் தீப்கே விடுத்த அழைப்பின் பேரில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இருதரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்ற மாநிலங்களிலும் போராட்டத்தை தூண்டியது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வளவு கலவரம் நடந்தும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தேர்வின் வினாத்தாள் கசிவுகளில் ஈடுபடுவோருக்கு விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்ட வரைவு குறித்து மத்திய அமைச்சரவை விவாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மறுதேர்வு நடத்தி முடிவுகளை அறிவிப்பதன் மூலம் மாணவர்கள் ஒரு கல்வியாண்டை இழக்காமல் இருப்பதை அரசு ஏற்கனவே உறுதி செய்துள்ளது என்றும், ஆனால் அந்த நடவடிக்கைகளால் மட்டும் அரசு திருப்தி அடையவில்லை” என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சகத்தில் பல அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அரசின் இந்த உத்தரவாதம் காரணமாக சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்து பழச்சாறு வழங்கி போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சோனம் வாங்சுக், “26 நாட்களுக்குப் பிறகு நான் இறுதியாக எனது உண்ணாவிரதத்தை முடித்தேன். முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னைச் சந்தித்து அல்லது கடிதங்களில் கையெழுத்திட்டு, உண்ணாவிரதத்தை முடிக்குமாறு வலியுறுத்தியிருந்தனர்.
நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையைக் கருத்தில் கொண்டும், பல்வேறு நிபந்தனைகள் மீதான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இது செய்யப்பட்டது. அந்த நிபந்தனைகளை மிக விரைவில் ஒரு தனி காணொளியில் விரிவாக விளக்குவேன். இதற்கிடையில், எங்கும் எந்த விதமான வன்முறையையும் அனுமதிக்காமல் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற அரசின் உறுதிமொழி ஏற்று சோனம் வாங்சுக் இந்த போராட்டத்தை நிறைவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டம் தொடர்வதாகவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







