மோடி தலைமையிலான அரசு எங்களுக்கு உதவி செய்து வாழ்வளித்து உயிர்மூச்சு அளித்திருக்கிறது- இலங்கை அதிபர் ரணில் உருக்கம்..!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கெதிராக வெடித்த மக்களின் போராட்டத்தால், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர்.

அதைத் தொடர்ந்து முதலில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பின்னர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில் இந்தியாவும், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பல்வேறு வகையில் உதவியது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இலங்கைக்கான இந்திய அரசின் உதவி கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலரை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் ஏழு நாள்கள் ஒத்திவைப்புக்குப் பிறகு இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில், அதிபர் ரணில் விக்ரம்சிங் இந்தியாவின்   உதவிக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

அப்போது அவர், “எங்களின் பொருளாதார மீட்டெடுப்புக்கான முயற்சிகளில் நமது நெருங்கிய அண்டை நாடான இந்தியா, வழங்கிய உதவிகளை இங்கு நான் குறிப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு எங்களுக்கு உயிர்மூச்சு அளித்திருக்கிறது. மக்கள் சார்பாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, ரணில் விக்ரமசிங்க இலங்கையின் முழுநேர அதிபராக தேர்ந்தெடுக்க பட்ட போது வாழ்த்து தெரிவித்த மோடி, இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.