விடாது துரத்தும் அமலாக்கத்துறை … இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் சோனியா காந்தி..!

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிட்.

நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

யங் இந்தியா பிரைவேட் லிட் நிறுவனத்தின் பங்குதாரர்களான காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் 5 நாட்கள் விசாரணை நடத்தியது. இதனையடுத்து, சோனியா காந்தியிடம் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல்முறையாக விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக நேற்று 2ஆவது நாளாக விசாரணை நடத்தியது.

இன்றைய விசாரணையின்போது 10க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுத்துப்பூர்வமாக எழுப்பி, அதற்கான பதில்களை எழுதுமாறு சோனியா காந்தியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் எம்பிக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு டெல்லியில் உள்ள அமலாக்க அலுவலகத்தில் இருந்து சோனியா காந்தி புறப்பட்டு சென்றார். நாளை (அதாவது இன்று) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

ராகுல் காந்தியிடம் விசாரணையின் போது எழுப்பப்பட்ட அதே கேள்விகள்தான், சோனியா காந்தியிடமும் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.