கோவிலின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த எலக்ட்ரீசியன் கைது..!

ஆனைமலை பொன்னாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 37). இவர் கோட்டூர் அடுத்த எஸ். பொன்னாபுரத்தில் உள்ள மதுைர வீரன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

சம்பவத்தன்று இரவு காளிமுத்து வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது கோவில் வழியாக குமார் என்பவர் நடந்த சென்றார். அவர் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.
சந்தேகம் அடைந்த குமார் கோவிலுக்குள் சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் பணம் திருடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே குமார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். ஆனால் அந்த வாலிபர், குமாரை தள்ளிவிட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே வீட்டு விட்டு தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து குமார் கோவில் பூசாரி காளிமுத்துவிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறினார். அவர் கோவிலுக்கு வந்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் லிங்கு பூபதி (32) என்பவரது மோட்டார் சைக்கிள் என்பது தெரிவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது தெரியவந்து. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கு பூபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.