குன்னூர்-கோத்தகிரியில் 35 இடங்கள் அபாயமானவை- சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தகவல் ..!

ஊட்டி: குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம் தனியார் கல்லூரியில் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், உடனடியாக மின்சாரத் துறை, மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து ஏதாவது சம்பவங்கள் நடந்ததால் எவ்வாறு தெரிவிப்பது என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறியதாவது:-
குன்னூரில் 15 இடங்கள் மற்றும் கோத்தகிரியில் 25 இடங்களில் அபாயகரமான இடங்களாக கண்டு அறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர், கன்னிமாரியம்மன் கோவில், பர்லியார் மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள கட்டபெட்டு பாரதிநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் அபாயகரமானது.
மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வடக்கிழக்கு பருவ மழை சமயத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை கண்காணிக்க குன்னுார் பகுதியில் 750 நபர்களையும், கோத்தகிரி பகுதியில் 713 நபர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாச்சியர் சிவக்குமார், கோத்தகிரி வட்டாச்சியர் காயத்திரி, அரசு அதிகாரிகள், பொது நல அமைப்புகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.