கஞ்சா கடததல் வழக்கில் கைதான பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா கடததல் வழக்கில் கைதான பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஈரோடு அருகே உள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் வந்த மோட்டார் சைக்கிளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர், ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மனைவி பூங்கோதை (வயது 46) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் பூங்கோதையை கைது செய்ததுடன் அவர் கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கோவையில் உள்ள இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பூங்கோதை கஞ்சா கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 10 ஆண்டும் ரூ.1 லட்சம் அபராதமும், அதை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், கஞ்சா கடத்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்திய பிரிவுக்கு 10 ஆண்டு சிறையும் ரூ.1 லட்சம் அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து போலீசார் பூங்கோதையை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.