சென்னையையே அதிர வைத்த வழக்கு:15 வயது சிறுமியை 21 பேர் சேர்ந்து சீரழித்த கொடூரம்- அனைவருமே “குற்றவாளிகளே” பரபர தீர்ப்பு.. தண்டனை விவரம் 19ம் தேதி அறிவிக்கப்படும்..

சென்னை: சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நேற்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி கூறுவதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமிதான் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த 15 வயதுச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமியின் உறவினர்கள் மீது புகார் வைக்கப்பட்டது.

சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி என்கிற வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா ஆகியோர் மீது புகார் வைக்கப்பட்டது. இவர்கள் 26 பேர் மீதும் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அதில் தலைமறைவாக இருந்த சிலரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் 22 பேரையும் கடந்த 2020- ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை இப்போது வரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக் கட்டத்தின் போது இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் நீண்ட விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அந்த சிறுமியை இவர்கள் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. பல பணக்காரர்களிடம் அந்த சிறுமியை இவர்கள் அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் முறையாக கோர்டில் சமர்ப்பிக்கப்பட்டது. சிறுமி தொடர்பான வழக்கு என்பதால் வழக்கு விசாரணை மூடப்பட்ட அறைகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. எதிர் தரப்பிற்கு எதிரான கடுமையான ஆதாரங்கள் இதில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என தீர்மானித்து அறிவித்தார். இவர்களுக்கு எதிராக குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார் . இந்த நிலையில் இவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும் 19 ஆம் தேதி கூறுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.