ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்தது தமிழக போலீஸ்..!

மிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி (காந்தி ஜெயந்தி அன்று) ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்காக பாதுகாப்பு கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கும் வகையில் மனுக்களின் மீது முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், பி.எப்.ஐ அமைப்பு சார்ந்தவர்களின் கைது மற்றும் அந்த அமைப்பின் தடையின் காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்துவதற்கும், அதற்கான அனுமதியை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, நவம்பர் 6ம் தேதி அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருமாவளவன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.