தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம் 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம் 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார்.

இதில், சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

இது குறித்து பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 12 இளமறிவியல் பாடப் பிரிவுகள் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டில், இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான மொத்தம் 8 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20 வரை பெறப்பட்டது.

இதில், அரசு கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்புக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 858 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம் 1,545 இடங்கள் என மொத்தம் 4,413 இடங்களும், தொழிற் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் மற்றும் 20 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 15 ஆயிரத்து 111மாணவர்களும், 24 ஆயிரத்து 378 மாணவியர்களும் விண்ணப்பித்து உள்ளனர். சிறப்பு

இடஒதுக்கீட்டின்கீழ், 301 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவிலும், 7 ஆயிரத்து 773 அரசு பள்ளியில் படித்த மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள்

144 மாணவர்கள், 1,849 மாணவர்கள் தொழிற்கல்வி பிரிவிலும் மற்றும் 808 மாணவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் விண்ணப்பித்து உள்ளனர்.

பழங்குடியினர் பிரிவில் மட்டும் 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீடில் 408 இடங்கள் உள்ள நிலையில் 7 ஆயிரத்து 773 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில், 200க்கு 200 மதிப்பெண்களை 7 பேர் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அதன்படி, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் சேலம், ராமநாதபுரம், தர்மபுரி சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் 200-க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். 199.5 மதிப்பெண் 14 பேரும், 199 மதிப்பெண்களை 3 பேரும் பிடித்துள்ளனர். மேலும், 195 மதிப்பெண்களுக்கு மேல் 513 பேர் எடுத்து உள்ளனர். கடந்த ஆண்டு 161 பேர் 195 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் வேளாண் கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 185.5 மதிப்பெண் பெற்றவர்கள் , தனியார் கல்லூரியில் 179 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது. டெக்னாலஜியில் சரா சரியாக 181 மதிப்பெண் கட்ஆப் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் மீடியத்தில் கடந்த ஆண்டு இரண்டு பிரிவுகளில் 50 இடங்கள் இருந்த நிலையில் தற்போது 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 சீட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு வேளாண் பல்கலை கழகம் கவுன்சிலிங் நடைமுறை துவங்கப்படும். கவுன்சிலிங் ஆன்லைன் நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேரடியாக நடத்தப்படும். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கவுன்சிலிங் தொடர்பாக யூடியூப் மூலம் தவறான தகவல் வெளியிட்டு வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகம் அதிகாரபூர்வ தகவல்களை மட்டும் மாணவர்கள் நம்ப வேண்டும். யூடியூப் சேனல்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.