கல் வீச்சு.. ஆதரவாளருக்கு கத்திக்குத்து.. பேனர்களுக்கு தீ வைப்பு… ஓபிஎஸ் வருகையால் ரணகளமான அதிமுக அலுவலகம்-சென்னையில் வெடித்த வன்முறை..!!

அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள் நுழைந்தனர். கல்வீச்சு, கத்திகுத்து, எடப்பாடி பேனர்களுக்கு தீ வைப்பு என்று சென்னை ராயப்பேட்டை பகுதி முழுவதுமே போர்க்களமாக காட்சியளிக்கிறது.

தடையை மீறி ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுட்ன நுழைந்ததால், இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.

பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக கூட்டம் நடைபெறறும் இடத்திற்குள் நுழைந்ததையடுத்து ஓபிஎஸ்&இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கு முன்னர் ஆதரவாளர்களை தனது வீட்டின் முன்பு சந்தித்த ஓபிஎஸ் அதன் பின்னர் தற்போது பிரசார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்துக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உருட்டுக்கட்டை, கம்புகள், கற்களை வீசி எறிந்தும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதனால் போலீஸ் அதிகாரிகள் குவிக்க்பட்டுள்ளனர்.

கட்சி தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பூட்டி வைத்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிரடியாக பூட்டை உடைத்து உள்ளே செல்ல வழி ஏற்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்  கட்சிக்கொடியை ஏந்தியபடி தலைமை அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். மேற்கொண்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.